செவ்வாய், 19 மே, 2009

வெடிக்கும் பட்டாசுகளும் கொதிக்கும் எம் மனங்களும்!



வெடித்துச் சிதறும் பட்டாசுகள் எங்கள் மனங்களில் எரிமலையாக வெடிக்கின்றன. நாங்கள் இப்பொழுது செய்வதறியாதிருக்கின்றோம்.

தலைநகர் எங்கும் பட்டாசுகள் வெடியோசை ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தேசியத் தொலைக்காட்சிகளில் இராணுவ வெற்றிகள் பகிரங்கப்படுத்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பட்டாசு வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கின்றன.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. அதற்கென்றே ஒவ்வொரு பாகங்களிலும் சிங்களவர்கள் கூட்டமாக நின்று அறிவிப்புகளுக்காக ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெண்கள் கூட்டமாக சேர்ந்து வீதிகளில் பாற்சோறு சமைத்து பாதசாரிகளுக்கும் வாகனங்களில் பயணிப்போருக்கும் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

வாகனங்களில் சிங்கக் கொடிகளுடன் கத்தி ஆரவாரமிட்டுக் கொண்டு கூட்டமாக செல்பவர்களின் கூச்சல்களும், ஊளையிடும் சத்தங்களும் வீதியெங்கும் நிறைந்திருக்கின்றன.

வீதிகளில் சத்தமாக பாடல்களை இசைக்கச் செய்து சிங்கக் கொடியுடன் ஆண்களும் பெண்களும் சேர்;ந்து ஆடி மகிழ்கின்றனர். அதைப் பார்க்கவென கொழும்புச் சந்திக்கு சந்தி ஒரு பெரும் கூட்டம்.

எங்கும் ஜயவேவா கோஷம். அப்பே ஹமுதாவட்ட ஜயவேவா அப்பே ஜனாதிபதித்துமாட்ட ஜயவேவா என்ற கோஷங்கள் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தன.

தொலைக்காட்சிகளில் மக்களின் பேட்டிகள். புலிகள் கொல்லப்பட்டமையை வரவேற்றும், நாடு விடுவிக்கப்பட்டது தொடர்பான மகிழ்ச்சியையும் அவர்கள் அனைவரும் வெளியிட்டனர். இடையில் ரணில் விக்கிரமசிங்கவை திட்டித் தீர்க்கவும் அவர்கள் மறக்கவில்லை. அவர் இருந்திருந்தால் பிரபாகரனுக்கு தமிழ் ஈழம் கிடைத்திருக்குமாம். நாடு ஒன்றுப்பட்டு விட்டதாகவும், இனி சிங்கள பறங்கியர் முஸ்லிம்கள் சுதந்திரமாக தடையின்றி வாழலாம் என்று தேசியத் தொலைக்காட்சியில் சிங்கக் கொடியை ஏந்தி வெற்றிக்களிப்பில் இருக்கும் ஒருவர் குறிப்பிடுகின்றார். எங்கே அதில் தமிழ் என்ற இனம்? அந்த நபர் மறந்து விட்டாரா அல்லது அறிந்தே அந்த சொல்லை கூற மறந்தாரா?

இவை அனைத்தும் நாடு புலிகளிடமிருந்து மீட்கப்பட்டமையை கொண்டாடும் நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஏன் வாகனத்தில் சிங்கக் கொடியினை பறக்கவிட மறந்து விட்டாயா? என்ற அதட்டலுடன் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருக்கும் படைச் சிப்பாய் வினவுகின்றான். நாங்கள் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்கும் தோரணையில் அவரைப் பார்க்கின்றோம்.

திகைப்பும், அச்சமும், நடந்தவற்றை ஏற்கவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் தவிக்கின்றது இங்கு தலைநகர தமிழினம்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியும் ஆட்கொள்கின்றது. வெற்றிக்களிப்பில் மமதையில் சுற்றித்திரிகின்ற சிங்கள மக்கள் மத்தியில் அமைதியாக இருப்பதனை விட வேறு என்ன தான் வழி தற்பொழுது எமக்கு இருக்கின்றது? என்ற கேள்வியினை ஆளுக்காள் மாறி கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

கேட்பாரற்று அட்டகாசங்கள் தொடர்கின்றன. நாடு பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்திற்கு அதனை கொண்டாடும் முகமாக வீடுகளில் வாகனங்களில் சிங்கக் கொடிகளை பறக்கவிடப்பட வேண்டும். அரச அலுவலகங்களில் கட்டாயம் ஒரு வாரத்திற்கு சிங்கக் கொடி பறக்கவிடப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் கட்டளை. கட்டளை மற்ற ஒரு இனத்தின் தன்மானத்தினை வெகுவாகப் பாதிக்கின்றது. வெற்றிக்களிப்பில் நிகழும் இந்த செயற்பாடுகள் யாவும் சகோதர இனத்தினைப் பாதிக்கும் என்ற கவலை துளியும் இன்றி வெறியாட்டமாக மாறியுள்ளது என்பது பெரும் கொடுமையாகும்.

இன்று கொழும்பில் நிகழும் இந்த வெற்றிக்களியாட்டங்கள் ஒரு இனத்திற்கு எதிரான வன்மத்தினை விதைக்கும் செயல்களாகி விட்டன என்பதே உண்மை.

தமிழர் கடைகள் முன் திரண்ட சிங்களவர்கள் புலிகளுக்கு எதிரான வெற்றியினைக் கொண்டாட பட்டாசுகளை வெடிக்க, பாற்சோறு உண்டு மகிழ வலுக்கட்டாயமாக நிதி திரட்டியிருக்கின்றனர் என்ற செய்தி தமிழர்களுக்கு நல்ல செய்தி அல்ல.

தமிழ் அடையாளங்களுடன் சென்றவர்கள் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். தகாத வார்த்தைப் பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் செறிந்திருக்கும் பகுதிகளில் திட்டமிட்டு பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டு பாற்சோறு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அதில் கலந்து கொள்ளாத தமிழர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றார்கள். தமிழர்கள் வீடுகளில் வாகனங்களில் சிங்கக் கொடியை ஏற்றுமாறு வற்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையும், அவர் அதில் கூறப்போகும் விடயங்களும் நிச்சயம் இந்த நடவடிக்கைகளை மென்மேலும் தீவிரப்படுத்தும். அவரின் உரையை செவிமடுக்கும் ஆர்வம் சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதுடன், அதன் பிறகு இந்த வெற்றி விழாவை தீர்க்கமாக முன்னெடுக்கும் தீர்மானத்தில் அவர்கள் இருக்கின்றார்கள்.

இந்த செயற்பாடுகள் அனைத்தும் தமிழர்களை கலக்கமுறச் செய்துள்ளன. தமிழினத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் காட்டுமிராண்டித்தனங்களுக்கு இந்த செயற்பாடுகள் அத்திவாரமாகி விடுமோ என்று அச்சம் மேலோங்கியுள்ளது. பதில் பேசவோ, மறுதலிக்கவோ திராணியற்று நடப்பவற்றை ஏற்கும் சங்கடமான நிலையில் தலைநகர் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. தமிழினத்தினை காட்டிக் கொடுத்து தன்மானம் இழந்த தமிழர்கள் இதற்கு விதிவிலக்கு.

தமிழர்களின் படை பலம் தகர்க்கப்பட்டு விட்டதாகக் கருதும் சி;ங்களம், அடுத்ததாக தமிழர்களின் பண பலத்தினை தகர்ப்பதற்கான முன்னணி செயற்பாடுகளாகவும் இவை மாறக் கூடும் என்ற அச்சம் பரவலாக இங்கு தமிழர்கள் மத்தியில் உள்ளது.

மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் தாயகத்தமிழர்களின் வாழ்வியலை சிதைத்து சின்னாபின்னமாக்கிய இந்த சிங்கள அரசாங்கம் தலைநகரில் தமிழர்களிடம் தனது வல்லமையை காட்ட விளையாது என்று எவராலும் உறுதிபடக் கூற முடியாது என்பதை இங்கு அனைத்து தமிழர்களும் அறி;ந்தே வைத்திருக்கின்றனர்.

கொடூரமான யுத்தத்தினை நடத்தி மனித குலம் மன்னிக்க முடியாத பேரவலங்களை நிகழ்த்தியுள்ள இந்த அரசாங்கத்தின் வெற்றிக்களிப்புக்கும் கொண்டாட்டங்களுக்கும் துணை போகாத தமிழர்களின் தலைவிதி எப்படியாகுமோ என்ற ஐயமும் தவிர்க்க முடியாமல் நிலவுகின்றது.

புலிகளை அழித்து விட்ட பின்னர் தமிழர்களுக்கு சம உரிமை எதற்கு? அரசியல் தீர்வு எதற்கு? தமிழர்களின் பேரம் பேசும் ஆற்றல், சக்தி அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது. இது தான் சிங்கள மக்களின் ஏகோபித்த தீர்மானம். தமிழின அழிப்பினை கண்டுகொள்ளாத சர்வதேசம் இனி தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றியோ அவர்கள் உரிமைகளைப் பற்றியோ அக்கறை செலுத்த தான் கூடுமா? இவையெலாம் எமக்கு வெளிப்படுத்தும் விடயம் என்னவெனில், தமிழர்களின் போராட்டச் சக்தி மீள் எழுச்சிப் பெறும் வரை சிங்களவர் காலடியில் நாம் கேட்பாரற்று நசுக்கப்படுவோம் என்பது தான்.

என்னதான் கூறி எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும் இந்த காலப்பகுதி தமிழனுக்கு கேடான காலப்பகுதியாகி விட்டது. தமிழன் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்;கின்றது. தமிழன் நம்பியிருக்கும் விடயங்கள் காலை வாரி விட்டு விடுகின்றன. நம்பிக்கைப் பூக்கள் பூக்க மறுக்கின்றன. அவலமும் அச்சமும் நிறைந்த வாழ்வே தமிழனுக்கு இங்கு தற்பொழுது உரித்தாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாட்டை மீட்டு விட்டதற்காக கொண்டாடப்படும் களியாட்ட நிகழ்வுகள் எதிர்வரும் நாட்களில் எவ்வாறான வடிவத்தினைப் பெறுமோ என்ற அச்சம் பரவலாக அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றது.

நன்றி:- viyapu.com

கருத்துகள் இல்லை: