புதன், 23 மே, 2007

“உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்”-திரு. பழ. நெடுமாறன் (புத்தகப் பார்வை)


அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற்படுகிறது. விளைவு தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தமிழ் மரபுகளை புறந்தள்ளி பார்ப்பனியம் கற்பித்த முடை நாற்றம் வீசும் ஆரிய-இந்து மரபுகளை ஏற்றுக் கொள்ளும் அவலம் தொடர்ந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களால் உருவாக்கப் பட்ட “ உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்” என்ற நூல் ஓர் அரிய வரலாற்றுக் கருவூலமாக வெளியாகி உள்ளது.

நூல் மொத்தம் முப்பத்தி ஏழு அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. ஆரியர் வருகையால் ஏற்பட்ட வருணாசிரம தர்மத்தின் தாக்கங்களும் அவற்றை எதிர்த்த பௌத்த சமண சமயங்களின் எழுச்சி மற்றும் பழந்தமிழரின் வழிபாடுகள் போன்றவற்றை இந்நூலின் தொடக்க அத்தியாயங்கள் விரிவாக விளக்குகின்றன. வள்ளலார் இராமலிங்க அடிகள், மகாத்மா ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தின் வர்ணாசிரமக் கொடுமைகளுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்கள் மற்றும் அவர்களின் சமூக சீர்திருத்தப் பணிகள் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன. இந்தியத் தேசியமும் இந்து தேசியமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். ஆங்கிலேயர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய செயற்கையான பூகோளக் கட்டமைப்பே இந்தியா, அதற்குமுன் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் இந்தியா என்றொரு நாடு ஒரு கொடியின் கீழ் ஏற்படவில்லை என்பதுடன் இந்து என்ற சொல் முதன் முதலாக கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் அரேபியர்களால்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதற்கு முன் எந்த இலக்கியங்களிலோ, வேதங்களிலோ புராண இதிகாசங்களிலோ இந்து என்ற சொல் இல்லை என்ற உண்மையையும் வெளிக்காட்டியுள்ளார்.



இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திலகர், அரவிந்தர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் இந்தியத் தேசியம் என்ற பெயரில் இந்துத் தீவிரவாதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து, இந்துக்களே இந்நாட்டின் மைந்தர்கள் என்று முஸ்லீம்களுக்கு எதிரான மதத் துவேசத்தையும் வகுப்புவாத வெறியையும் விதைத்தனர். இவர்களால் உருவாக்கப் பட்ட இந்து மதவெறி வி.டி.சாவர்க்கர் காலத்தில் மேலும் தீவிரமாகி இந்தியாவில் இரத்த ஆற்றை ஓட வைத்ததுடன் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திய அண்ணல் காந்தியடிகளின் உயிரையும் பறித்த நிகழ்ச்சிளை எல்லாம் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றுகளுடனும் பல வரலாற்று அறிஞர்களின் மேற்கோள்களுடனும் நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். அண்ணல் காந்தியடிகளின் கொலையில் மறைக்கப் பட்ட உண்மைகள் “காந்தியடிகளும் ஆர்.எஸ்.எஸ்.சும்” என்ற அத்தியாயத்திலும் “கொலைவெறிக் கும்பல்” என்ற அத்தியாயத்திலும் விரிவாக அலசப்பட்டுள்ளன. காந்தியடிகளைக் கொலை செய்த இந்து வெறியரான நாதுராம் கோட்சேக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த வி.டி.சாவர்க்கருக்கும் இருந்த உறவும், காந்தி கொலையின் முக்கிய குற்றவாளி வி.டி.சாவர்க்கர் என்பதும் மறுக்க முடியாத வரலாற்று ஆவணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ‘தேசத்தந்தை’ என்று கருதப்படும் காந்தியடிகளைக் கோட்சேயை அனுப்பி கொலை செய்த குற்றவாளி வி.டி.சாவர்க்கரின் உருவப் படத்தை இந்துத்துவக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்திய நாடளுமன்றத்தில் திறந்து வைத்து அழகு பார்த்த அவலமும் நடைபெற்றது. காந்தியடிகளைக் கொலை செய்த காவிக் கூட்டம் பச்சைத் தமிழர் காமராசரை உயிரோடு வைத்துக் கொளுத்த முயன்றதையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

பாகிஸ்தான் பிரிவினையை முன் வைத்த முகமது அலி ஜின்னா உண்மையில் அதைத் தவிர்த்து மானில சுயாட்சியை ஏற்கத் தயாராக இருந்தார் என்றும் இந்தியப் பெருமுதலாளிகளின் இந்துத் தீவிரவாதப் போக்கினால் அவர் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது என்ற உண்மையை அன்றைய காலகட்டத்தில் இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த மௌலான ஆசாத் போன்றவர்களின் மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று பசுவின் புனிதம் பற்றி வாய் கிழியப் பேசும் பார்ப்பனர்கள் முன்னொருகாலத்தில் பசு வேட்டையாடி அவற்றை யாகத்தில் வெட்டி பலி கொடுத்ததோடு மட்டுமல்லாது அவற்றின் இறைச்சியையும் உண்டார்கள் என்றும், ஆரியர்களால் போற்றப் படும் வேத விற்பன்னர்களான பிரஜாபதி, யாக்ஞவல்கியர், தேவகுரு பிரகஸ்பதி போன்றவர்களும் மனு சாத்திரம், மகாபாரதம், போன்ற ஆரிய நூல்களும் பசு இறைச்சி உண்பதை நியாயப் படுத்துகின்றன என்பதை எல்லாம் புராண இதிகாசச் சான்றுகளுடன் திரு பழ. நெடுமாறன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

மொத்தத்தில், திலகரால் உருப்பெற்ற இந்துத் தீவிரவாதம், வி.டி.சாவர்க்கரால் வடிவம் பெற்று இன்று ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற மதவெறி இயக்கங்களாக வளர்ந்து நிற்கின்றன. இவர்களின் பாரதப் பண்பாடு என்பது பார்ப்பனப் பாசிச கருத்துருவாக்கமே. இவர்களின் ‘அகண்ட பாரதக் கனவு’ என்பது, ஜெர்மனியைச் சுற்றியிருந்த ஆஸ்திரியா, போலந்து, அங்கேரி போன்ற நாடுகளைக் கைப்பற்றி, தேசிய இனங்களை அழித்து, ஜெர்மனிய வல்லரசைக் கட்டி எழுப்ப முயன்று ஐரோப்பாவையே இரத்த வெள்ளத்தில் மூழ்க வைத்த பாசிச இனவெறியர் இட்லர் கண்ட கனவுக்கு ஒப்பானது என்பது தெளிவாகிறது.

திரு பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய இந்த நூலை வாசித்து முடித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு ஆழமாகச் சிந்தித்தால் ஓர் உண்மை தெளிவாகப் புலனாகிறது. உண்மையில் நாம் எல்லோரும் இந்துக்கள் நமக்குள் வேற்றுமைகள் வேண்டாம் என்ற எண்ணம் இந்தியத் தேசியவாதிகளுக்கோ அல்லது இந்துத் தேசியவாதிகளுக்கோ இருந்திருந்தால் அவர்கள் தமிழீழத்தை ஆதரித்திருப்பார்கள் ஏனெனில் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாகவே கருதப்படுகின்றனர், மற்றும் இந்தியாவின்பால் பற்றுக் கொண்டவர்கள். ஆனால் இந்திய மேலாதிக்க வர்க்கமானது “இந்திய-சீனப் போர்”, “இந்திய-பாகிஸ்தான் போர்” இன்னும் பல காலகட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு ஆதரவு அளித்த சிங்கள அரசையே ஆதரிக்கிறது. சிங்களவர்கள் வேறு மதத்தினராக இருந்தாலும் ஆரியர்கள், நம்மவர்கள் என்ற அவர்களின் நினைப்பே அதற்குக் காரணம். தமிழர்கள் என்ன செய்வார்கள் பாவம் அவர்கள்தான் பிரம்மாவின் காலில் இருந்து தோன்றிய சூத்திரர்களாயிற்றே.

தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் படித்துப் பயன் பெறக்கூடிய அரிய வரலாற்றுத் தொகுப்பாக இந்நூல் அமைகிறது. இந்து-இந்திய மாயையில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் இந்நூலை படித்தபிறகாவது மத அடையாளங்களைத் துறந்து தமிழ்த் தேசிய அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டால் அது, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.

உலகமயமாக்கல்

உலகமயமாக்கல் கொள்கையால் உலக அரசியல், பொருளாதாரம் மாறிவருகிறது. இதனால் தொழிலாளர்கள் நிலையும் மாறிவருகிறது. தொழிலாளர்கள் யார் என்ற வரையறையும் மாறிவிட்டது.

உலகெங்கும் தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரமில்லை, அவர்களின் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. இவற்றை பற்றி இக்குறுங்கட்டுரையில் பார்ப்போம்.

"ஆர்த்திடும் இயந்திர கூட்டங்களே, உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ, நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ"
தமிழ்க்கவியின் இந்த கவிதை வரிகள் தொழிலாளர்களது முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆனால், உலகில் அனைத்தையும் படைக்கிற தொழிலாளர் நிலை இன்று மிக பரிதாபமான நிலைக்கு மாறியிருக்கிறது.

உழைப்பின் உருமாற்றம்
கடந்த காலத்தில் “தொழிலாளர்” என்பது விவசாயிகளையும், ஆலையில் பணிபுரிபவர்களையும் குறித்தது. அதிகமாக உடல் உழைப்பை மட்டுமே மையமாக கொண்டது இந்த விளக்கம்.

அந்த காலத்தில், கடினமான உடல் உழைப்பை வைத்து, சுரங்கங்கள், ஆலைகள், தோட்டங்கள், விவசாயம் போன்றவை அதிகமாக இயங்கிவந்தது. இப்போது தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் அந்த நிலை மாறிவிட்டது. அதிகமான மக்கள் உயர் தொழில்நுட்ப வேலைகளை செய்கிறார்கள். கல்வி, மருத்துவம், சமூகநலம் போன்ற துறைகளின் ஈடுபாடு பெருகிவருகிறது. இன்றைய உழைப்பின் நோக்கம். படைப்பு திறனை வெளிக்கொண்டு வருவதும்அதனால் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதும் முக்கிய பண்பாக அமைந்துள்ளது. வியாபாரம் தான் பணத்தை மையமாக கொண்டு இயங்குகிறது.

மாறிவரும் உலக சூழ்நிலைக்கு ஏற்ப, உழைப்பிற்கு புது விளக்கம் தேவைப்படுகிறது. இந்த விளக்கம் பல துறைகளை உள்ளடக்க வேண்டும்.

இன்றைய காலத்தில், உழைப்பு என்பது உடல், சிந்தனை, அறிவு, சார்ந்த பணிகளால், சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக படைத்தல், உற்பத்தி செய்தல், மெருகூட்டுதல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது. மக்கள் பிறருக்காகவும் தங்களுக்காகவும் ஆற்றும் சமூக, பொருளாதார, கலாச்சார கடமையின் வழியாக உழைப்பு மனிததன்மையடைகிறது. இதனால் உழைப்பு வெறும் பணத்திற்காக விற்பனை செய்யும் சக்தியல்ல. மாறாக, சமூகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் உன்னத கடமை.




இன்று உழைப்பை சொந்தமாக்கி வைத்திருப்பது யார்? சமுதாயமா இல்லை ஒரு குறிப்பிட்ட கூட்டமா? இது தான் சமூகத்தில் கேட்கப்படவேண்டிய முக்கிய கேள்வி. தனி முதலாளிகள் ஆதிக்கம் நிறைந்த காலம் மாறிவிட்டது. இன்று உலகை கட்டுப்படுத்துவது அமரிக்காவின் பொருளாதார, கலாச்சார, அரசியல் ஆதிக்கம். இந்த வழியை பின்பற்றி தான் பன்னா¡ட்டு தனியார் நிறுவனங்கள் உழைப்பை கட்டுப்படுத்துகிறது. நமது அரசுகளின் திட்டங்கள் இவற்றிற்கு சாதகமாக மாறி வருகிறது. இதுதான் உலகமயமாக்கல் கொள்கையின் தாக்கம். இதை சரிவர புரிந்து கொள்ள உலகமயமாக்கல் திட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலாளர் உரிமைகள் தோன்றிய விதம்
தொழிலாளி என்றவுடன் நம்மில் பலருக்கு வெறுப்பும், வேண்டாதவர்களை பார்ப்பது போன்ற எண்ணமும் ஏற்படுவதை மறுக்க இயலாது. அதே நேரத்தில், இன்று நாம் உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை தொழிலாளர் உழைப்பில் வந்தவை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இப்படி சமூகத்தின் தேவைகளுக்கு உழைக்கும் மக்களைப் பற்றி கவனமும், அக்கறையும் செலுத்துவது நமது முக்கிய கடமை.



இன்று நாம் அனுபவித்து வருகிற அனைத்து உரிமைகளும் ஒரு காலத்தில் போராடி பெற்றவை. உதாரணமாக எட்டு மணி நேரம் வேலை என்பது தானாக கிடைத்ததல்ல. 1886 ஆண்டில் சிக்காக்கோ நகரில் வெடித்த போராட்டம் வழிதான் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை செய்வதிலிருந்து 8 மணி நேரம் வேலை என்ற உரிமை பிறந்தது. இதற்காக உயிரை கொடுத்தவர்கள் பலர். அதனால் இன்று 8 மணி நேரம் வேலை என்ற உரிமைக்கு என்ன ஆகி இருக்கிறது? இன்று உரிமைகளுக்கான நடவடிக்கைகளும், போராட்டங்களும் நம்மால் எப்படி பேசப்படுகிறது?

கட்டாய அதிகநேர வேலை (Forced overtime work)
ஜப்பான், ஆஸ்திரேலியா, அமொரிக்கா, ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், ஸ்பெயின், ஹாங்காங்க், போன்ற நாடுகளில் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக கட்டாயமாக வேலை வாங்கப்படுகிறது. ஒரு நிறுவனம் உற்பத்தி அல்லது அதன் சேவையை அதிகரிக்கும் போது தொழிலாளர் பற்றாக்குறையால் அதிகநேர வேலை தேவைப்படுகிறது. அந்த நிலைக்கு நிறுவனம் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். 8 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை செய்தால் இரண்டு மடங்கு சம்பளம் வழங்கவேண்டும். இந்த நடைமுறை விதி மீறப்படுகிறது மட்டுமல்ல, அதிக நேரம் வாங்கப்படுகிற வேலைக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. உற்பத்தி அல்லது வியாபாரதில் ஈடுபடும் போது பணம் மட்டுமல்ல நோக்கமாக இருக்கப்பட வேண்டியது. தொழிலாளர் நலனும் பேணப்பட வேண்டும்.

இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பிரேசில், கொலம்பியா போன்ற பல நாடுகளிலும் ஒப்பந்த தொழிலாளர் என்ற பெயரில் அதிகநேர வேலை விருப்பத்துக்க்கு மாறாக திணிக்கப்படுகிறது. கட்டாய வேலையை உலக தொழிலாளர் அமைப்பில் (International Labour Organisation, an organisation for workers in the United Nations system) தடைசெய்ய பேசி திட்டமிட்டு வருகிற நமது அரசுகள்ஏன் இப்படி முரண்பாடாக நடக்கிறது? ஏன் இந்த நிர்பந்தங்கள்?

வேலையில்லா திண்டாட்டம்
இதே வேளையில், வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலையில்லை. ஜப்பான் நாட்டில் வேலையில்லா இளைஞர்கள் ரயில் நிலையங்களிலும், சாலையோரங்களிலும் கடுங்குளிரில் எந்த வசதியும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வாழ்கிறார்கள். ஆஸ்திரேலியா, அமரிக்கா, ஜெர்மனி, கனடா போன்ற சில வளர்ந்த நாடுகளில் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை இப்போது பறிக்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள் நிலை பரிதாபம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. நமது நாட்டில் சுமார் 20 கோடிக்குஅதிகமான இளைஞர்களுக்கு வேலை இல்லை. இந்த இளைஞர்களது சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த சரியான திட்டங்கள் இல்லை. சுயதொழில் திட்டங்கள் என்று இருக்கிறவை கூட வேலையில்லாதவர்களுக்கு பயன்படவில்லை. பணியில் இருப்பவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு அந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. பல அரசுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதால் பலரின் வேலை பாதுகாப்பு பறிபோகிறது.

நமது நாட்டில் கிடைக்கிற வளங்களை பயன்படுத்தி புதிய வகை தொழில்களை உருவாக்கினால் பலருக்கு வேலை கிடைக்கும். அதிகநேர வேலையை தடை செய்து, பலருக்கு புது வேலையை உருவாக்கலாம். இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் 8 மணி நேர வேலை கூட அதிகமானது, ஆக அதை 6 மணி நேரமாக மாற்றினால் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். ஏன் இப்படிபட்ட சமுதாய நோக்கமுடைய திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படவில்லை?

குறைந்த கூலி, பணி பாதுகாப்பற்ற தன்மை
ஏராளமான தொளிலாளர்கள் எந்த பாதுகாப்பும், உரிமைகளும் இல்லாமல், அமைப்பு சாராத வேலைகளில் குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள். இவர்கள் கடைவீதிகளிலும், வீடுகளிலும் பொருட்களை உருவாக்க, விற்க வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை. பிலிப்பைன்ஸ், தாய்லந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில்பல குடும்பங்கள் கடை வீதியில் எலுமிச்சை பழம், கருவாடு (உலர்ந்த மீன்), காய்கறிகள், விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை விற்று வாழ்கிறார்கள். இதனால் வரும் வருமனம் குறைவானதால் குழந்தைகள் படிக்க வாய்ப்பு இல்லை.



நமது பகுதிகளில் கடைகளிலும், சிறுநிறுவனங்களிலும் வேலை செய்பவர்களுக்கு மாதம் வெறும் 500 முதல் 750 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு நாளைய கூலி 16 முதல் 25 ரூபாய் மட்டுமே. ஆனால் அவர்களிடம் வாங்கப்படுகிற வேலை சுமார் 10 முதல் 12 நேரம். இது நீதியான நடைமுறை தானா? இந்த சம்பளம் இவர்களுக்கு போதுமானதா? குறைந்தபட்ச கூலி 8 மணி நேரத்துக்கு 50 ரூபாய் (இதன் படி மாதம் 1500 ரூபாய் வழங்கப்படவேண்டும்) என சட்டம் இருக்கையில் இந்த நிலை தொடர்வது ஏன்? இலாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி செல்வம் சேர்ப்பது சரிதானா?

இந்த நிலை சாதாரண கடைகளில் மட்டுமல்ல. மருத்துவமனைகள், ஆங்கில பள்ளிகள், சிறிய தொழில்கள், ஆலைகள் என அனைத்து இடங்களிலும் இது தொடர்கிறது. உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு குறைந்த கூலிக்கு வேலை வாங்கப்படுகிறது. இந்த சட்டவிரோத செயல்களை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை சரிவர செயல்படவில்லை.

பெண் தொழிலாளர்களின் பரிதாபநிலை
பெண்களின் நிலமை இன்று மிகவும் மோசமனது. பணி தலங்களில் சரியான பாதுகாப்பில்லை. ஒரே விதமான வேலைக்கு பெண்களுக்கு ஆண்களை விட குறைந்த கூலி வழங்கப்படுகிறது. பாலியல் கொடுமைகளும், பெண் என்பதால் பதவி உயர்வு மறுக்கப்படுவதும், அவமதிக்கபடுவதும் எல்லா இடங்களிலும் காணலாம். பெண்களுக்கு தொழிற்சங்கங்களில் சரியான இடமில்லை.

பெண்களுக்கு பேறுகால விடுப்பு, குழந்தைகளை பராமரிக்கும் வசதி இவை மறுக்கப்படுகிறது. நமது வீடுளில் பெண்கள் செய்யும் வேலைகளுக்கு மதிப்பு வழங்கப்படுகிறதா? அம்மா, சகோதரிகள், மனைவி என பலரும் செய்யும் வீட்டுவேலைகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கிறோமா?

விவசாயிகளின் நிலை
விவசாயத்தில் நன்றாக வளர்ச்சியடைந்த, பெல்ஜியம், அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. தொழில்நுட்பம் (மிகப்பெரிய எந்திரங்கள் முதல் தனி அறைகளில் பயிர் வளர்க்கும் உயர் தொழில்நுட்பம் வரை), மானியம் (அரசு உதவி) போன்றவை வளர்ந்த நாடுகளில் விவசாயிகளுக்கு மிக எளிதாக கிடைக்கிறது. வளரும் நாடுகளில் கால்நடைகள் மற்றும் மரபு ரீதியான தொழில்நுட்பம், அரசு உதவி இல்லாத நிலை. இதனால் வளரும் நாடுகளில் உற்பத்தி குறைவு, உரம் மற்றும் விதை பொருட்களின்விலை அதிகம். பட்டினி சாவுகளும் இடம்பெயர்தலும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையாக மாறியது இதனால் தானே?



ஆனால் உலகமயமாக்கல் திட்டதின் படி எல்லோருக்கும் பொதுவான சந்தை முறை. இந்த விதமான போட்டியான சந்தையில் வெற்றி வளர்ந்த நாடுகளுக்கு. பாதிப்பு வளரும் நாடுகளின் சாதரண விவசாய தொழிலாளிக்கு.

குளிர்பான கம்பெனிகள் வளரும் நாடுகளின் தண்ணீரை விற்பனை செய்து அதிக இலாபமடிக்கிறது. இந்த தன்ணீருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாததால் நிலத்தடி நீர் குறைந்து வறட்சி எற்படுகிறது. இதன் பாதிப்பும் வளரும் நாடுகளின் ஏழை விவசாயிக்கு. அயல்நாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு கொள்ளை இலாபம்.

இந்த நிலமைகளுக்கு காரணங்கள்
இந்த சூழ்நிலைகளுக்கு காரணங்கள் பல அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

# உலக நாடுகளின் பொருளாதார திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே சாதகமனவை.
# அந்தந்த நாடுகளின் தன்மைக்கு ஏற்ற பொருளாதார திட்டங்களை புறக்கணித்து, உலகம் முழுவதும் ஒரே வகையான திட்டத்தை நடைமுறைப் படுத்தியது.
# முதலீட்டாளர்களுக்கு சாதகமாக, தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து ஒப்பந்த வேலை முறைக்கு (contract work) அனுமதி கொடுத்து பல கோடி தொழிலாளர்களது வேலை பாதுகாப்புக்கு ஆபத்தை உருவாக்கியது.
உலகமயமாக்கல் பொருளாதார கொள்கை என்ற பெயரில் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், அயல்நாட்டு, தனியார் நிறுவனங்களை மட்டும் நோக்கமாக கொண்ட திட்டங்கள்.
# உலக வங்கி, பன்னாட்டு வர்த்தக நிறுவனம் (WTO) போன்றவற்றின் கடுமையான நிர்ப்பந்தங்களுக்கு உடன்பட்டு கடன் பெறுவது.
# உலக தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation) வழிகாட்டுதல்கள், தொழிலாளர் நல உடன்படிக்கைகள் சரிவர நடைமுறை படுத்தாதது.
# தொழிலளர்கள் நலனில் அக்கறையுடன் அரசாங்கங்கள் செயல்படாதது.
# தொழிலளர்களுக்கு பாதுகாப்பான பொருளாதர, சமூக திட்டங்களை நடைமுறைபடுத்தாதது.

புதிய உலகை நோக்கி
இந்த நிலைகள் மாற நாம் புது உலகை உருவாக்க வேண்டும். இந்த புதிய உலகில் வேலை, வளங்கள் அனைத்தும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம். மனிதனை மையமாக வைத்து, சமூக பொருளாதார திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அடக்குமுறைகளும், அடிமைத்தனமும் அழிந்து சமத்துவம், விடுதலை, மனித உரிமைகள், நீதி, சமாதானம் போன்ற நல்ல பண்புகள் புது உலகின் மைய கருத்தாக அமைய வேண்டும்.


இந்த சூழ்நிலைகளை உருவாக்க நாம் அனைவரும் சமூக நலனில் அக்கறை கொள்ள வேண்டும். மக்களிடம் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளூக்கு தீர்வை தருகிற தன்னலமற்ற தலைவர்களை உருவாக்க வேண்டும். நமது செயல், சிந்தனை முதலியவற்றில் மாற்றம் வேண்டும். இந்த மாற்றத்துக்கு நமது கல்வி உதவியாக இருக்கவேண்டும். புதிய உலகம் பற்றிய நமது கனவும் , முயற்சிகளும் நமக்கு விடிவை தேடித் தரட்டும்.

நன்றி :-நிலா முற்றம்

வெள்ளி, 18 மே, 2007

சாதி

"‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்"

இன்றைய காலகட்டத்தில் ‘மதம்’ என்கின்ற சொல் ‘பிரச்சனைக்குரிய விடயங்களைச் சுட்டிக் காட்டுகின்ற’ சொல்லாக அர்த்தம் பெற்று வருகின்றதோ என்கின்ற ஐயமும், அச்சமும் எமக்கு உண்டு. ‘மதம்’ என்பது வேறு, ‘கடவுள் என்பது வேறு!’ ‘மத நம்பிக்கை என்பது வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு!’ என்பது போலத்தான் இப்போது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
எதைப் பற்றியும் தர்க்கிக்கலாம், ஆனால் மதம் குறித்தோ, கடவுள் குறித்தோ தர்க்கிக்கக் கூடாது என்கின்ற எழுதப்படாத விதி ஒன்று இருப்பதைப் பற்றி நாம் அறிவோம்.

ஆனால் பௌத்த பேரினவாதம் குறித்து நாம் வன்மையாகக் கண்டித்துக் கட்டுரை எழுதுவதற்குக் கைதட்டல் கிடைப்பது போல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதினால் ‘எது கிடைக்குமோ’ என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு. சிங்கள-பௌத்த பேரினவாதம் குறித்து கண்டித்துக் குரல் எழுப்புவதற்கு நான் ஒரு ஈழத் தமிழன் என்பது ஒரு தகுதியாக இருக்கின்றது.

அதுபோல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதுவதற்கு, பிறக்கும்போது சைவனாகவும,; பின்னர் இந்துவாகவும் மதமாற்றம் செய்து கொண்ட எண்ணற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்ற தகுதியே போதும் என்ற தைரியமும் எனக்கு உண்டு.

ஒரு விடயத்தை மிக முக்கியமான விடயத்தை இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வலியுறுத்திச் சொல்லிவிட விரும்புகின்றோம். எவர் மனத்தையும் புண் படுத்தும் நோக்கமோ அல்லது எவரது நம்பிக்கையையும் விமர்சிக்கும் நோக்கமோ எமக்கு கிடையாது. எந்த மதத்தையோ, கடவுளையோ, உயர்த்தவோ, தாழ்த்தவோ நாம் முயலவில்லை. எமது எண்ணமும் அதுவல்ல!

நடந்ததை, நடப்பதை நாம் உங்களுக்குச் சொல்ல வருகின்றோம். அவ்வளவுதான்! அதனை உங்கள் சிந்தனையில் நிறுத்தி இனிமேல் நடக்க வேண்டியது என்ன என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். சிந்தனையில் சீர்திருத்த மாற்றம் வராமல் செயலில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை நாமும் நம்புகின்றோம்.

இன்றைய தினம், குறிப்பாக இந்தியாவில், இந்துக்களின் பேரினவாதத்தை ‘இந்துத்துவம்’ என்று தாழ்த்தப் பட்டவர்கள் சொல்கிறார்கள். ’அப்படியில்லை’ இந்து தர்மத்தின் உயரிய கோட்பாடுகளின் தொகுப்புத்தான் இந்துத்துவம்- என்று இந்துமதத் தீவிர சிந்தனையுள்ளவர்கள் வாதிடுகின்றார்கள். இந்து மதத்திலுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக இன்று சாதிப் பாகுபாடு இருப்பதைக் காண்கின்றோம். இதற்குக் காரணம், இந்த வருண சாதி வேறுபாடுகளை இந்துமத வேதங்களே அறுதியிட்டுக் கூறுவதாகச் சொல்கின்றார்கள்.

நான்கு வருண உருவாக்கம் குறித்துப் பேசுகின்ற ‘இருக்கு வேதத்தின்’ புருஷ சூக்தத்தில், புருஷன் என்கின்ற உடலை நான்காக வகுத்து நான்கு வருணங்கள் தோற்றுவிக்கப் பட்டதாகக் கதையாடல் அமைக்கப் பட்டுள்ளது. படைப்புக் கடவுள் பிரம்மாவின் வாயிலிருந்து பிராமணனும், நெஞ்சில் இருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து இவர்கள் மூவருக்கும் சேவை செய்யும் அடிமையாக சூத்திரன் என்பவனும் உருவாக்கப் பட்டார்கள். இந்த சூத்திர சாதியை சேர்ந்தவர்கள்தான் திராவிடர்கள் என்பது பின்னால் விளக்கப் படுகின்றது.

இந்த நான்கு வருணத்தையும் (நான்கு சாதி அமைப்புக்களையும்) தாண்டியவர்கள் மிகக் கேவலமாக சண்டாளர்கள்- தீண்டத் தகாதவர்கள் என அழைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, ஒதுக்கப்படுகின்றார்கள். இவர்கள் ‘தலித்துக்கள்’ என்று இப்போது குறிக்கப் படுகின்றார்கள். ‘தலித்’ என்ற சொல் எப்படி வந்தது என்பதை முதலில் பார்ப்போம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தீண்டத் தகாத சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க நினைத்து, ஒரு அட்டவணையைத் தயாரித்தார்கள். அந்த அட்டவணையில் வந்த சாதியினரை (ளுஉhநனரடநன ஊயளவந) (ஷெடியூல்ட் காஸ்ற்) அட்டவணைச் சாதியினர் என்று அழைத்தார்கள். பின்னர் மராட்டிய இலக்கியத்தில் அட்டவணைச் சாதியினரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்லாகிய ‘தலித்’ என்ற வார்த்தை உபயோகிக்கப் பட்டது. ‘தலித்’ என்பது ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, உழைக்கும் சாதிமக்களைக் குறிக்கின்ற மகாராஷ்டிர சொல் வழக்கிலிருந்து உருவாகியது.

மேற்கூறிய நான்கு வருணங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்ட தலித்துக்கள் ‘புருஷன்’ என்கின்ற உடலுக்கே அப்பாற் பட்டவர்களாகத் தள்ளி வைக்கப்பட்டனர். நடைமுறையில் ஊருக்கு வெளியே இவர்களுக்காகச் சேரிகள் உருவாக்கப் பட்டன. இவர்களைத் தொட்டாலும், பார்த்தாலும் தீட்டுக் கற்பிக்கப் பட்டது. மலம் அகற்றுதல், சவம் காவுதல், பறையடித்தல் முதலான தொழில்கள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டன.

கடும் உடலுழைப்பு இவர்களுக்கென்றானது. இவர்களின் கடும் உழைப்பிற்கு ஈடாக உயிர் வாழ்வதற்கு தேவையான மிகவும் குறைந்தபட்ச ஊதியமே இவர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டது. திருவிழா முதலிய சடங்குகளிலும் இவர்கள் மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டு, கடும் உடல் உழைப்பைச் செய்யும் பணிகள்; அங்கும் இவர்களுக்கு கொடுக்கப் பட்டன. மேலாடை அணியக் கூடாது. குடிசைகளுக்கு ஓடு வேயக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. சைக்கிளில் செல்லக் கூடாது பொதுச்சாலைகள், பொதுச் சுடுகாடுகள், பொது இடங்கள் போன்றவற்றை இந்த மக்கள் பயன்படுத்தக் கூடாது’ என்ற விதிகள் பிறப்பிக்கப் பட்டன.

பிறவி அடிப்படையில் தொழில் என்பது எல்லாச் சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் நடைமுறையில் இருந்ததுதான்! என்றாலும் தொழிலைப் பிறவி அடிப்படையில் ஒதுக்கி அதற்கு சடங்கு ஆசார அடிப்படையில் நியாயம் வழங்குகின்ற கோட்பாட்டை உருவாக்கி திருமண உறவுகளையும் சாதிக்குள்ளேயே முடக்கி அது மட்டுமல்லாமல் இவற்றை எந்த வகையிலும் மீறக்கூடாத விதமாக வழிகளையும் தடை செய்தது - எமது சமூகம் தான்! இதனை நியாயப்படுத்தும் வகையில் முற்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் சாதியும் வாழ்நிலையும் நிர்ணயிக்கப் படுகின்றன’ என்கின்ற கர்மவினைக் கோட்பாடும் இங்கு உருவாக்கப் பட்டது.

தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த மட்டில், சங்க காலத்தின்போது இப்போதுள்ளது போல இறுக்கமான சாதிப் பிரிவினைகளும், தீண்டாமையும் நிலவ வில்லையென்றாலும், சங்ககாலத்திலேயே ஒரு சாரார் ‘இழிசனர்’ என்று ஒதுக்கப்பட்டதற்கும், அவர்களது பேச்சுவழமையை ‘இழிசனர் மொழி’ என்றும், தமிழ் இலக்கியத்திற்கு ஒவ்வாதது என்றும் தள்ளி வைக்கப்பட்டதற்கும் தக்க சான்றுகள் உண்டு. தமிழ் மொழி தரப்படுத்தப்பட்ட காலத்தில், செந்தமிழ், கொடுந்தமிழ் என்று பிரிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் தமிழ் கொடுந்தமிழாக ஒதுக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சமூகத்திலும் வருண சாதிக் கோட்பாடுகளும், தீண்டாமையும் வேர் கொள்ள ஆரம்பித்தன. கிறிஸ்துவுக்கு பின் ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் இத்தீண்டாமை இறுக்கமாக மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றுகள் பல உண்டு. நந்தனார் கதையோடு, திருநாவுக்கரசரின் பதிகங்களையும் சான்றுகளாகக் காட்டலாம். என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் பிற இந்திய சமூகங்களைப் போல சத்திரிய வர்ணம் கிடையாது. சூத்திர வர்ணங்களில் ஒருவரான வேளாளர் இங்கே பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலான ஆதிக்க சக்திகளாக விளங்கினர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நிலவுடைமை ஆதிக்கம் இவ்விரு சாதியினிடமே குவிந்திருந்தன என்று (டீரசவழn ளுவநin) பேர்ட்டன் ஸ்டெய்ன் போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்கள் நிறுவுகின்றார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழரிடையே பார்ப்பனிய மேலாதிக்கம் இல்லாதிருந்த போதும் மேல் சாதியினரிடம் பார்ப்பனிய கொள்கைகள் ஊறிப்போய் ஆதிக்கம் செலுத்தின என்பதே உண்மையாகும்.

பிரபல சிந்தனையாளரான பேராசிரியர் காஞ்சா அய்லய்யா தனது ஆய்வு நூலில் கீழ் கண்டவாறு குறிப்பிடுகின்றார். இவர் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் இராமன்-இராவணன் போர் குறித்து அவர் குறிப்பிடுகின்றார். அது சைவத் தமிழனுக்கும், ஆரிய இந்துவுக்கும் நடந்த போரைக் காட்டுகின்றது. அவரது கூற்றின்;படி:

“ஆரிய இந்துத்துவ வர்ணாசிரம கோட்பாட்டின்படி வடஇந்தியாவில் எல்லாப் பிரிவினரும் நம்பிக்கையிழந்த நிலையில் அடிமைகள் ஆக்கப் பட்டார்கள். பார்ப்பனர்கள், திராவிடர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த தென்னிந்தியாவிலும், அதற்கு அப்பாலும் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப நினைத்தார்கள். தாடகை, சம்புகன், வாலி, இராவணன் ஆகியோர் தலித் பகுஜன்களின் தலைவர்களாக இருந்து வந்தார்கள்.

இப்போது சில பார்ப்பனர்கள் இராவணனும் ஒரு பார்ப்பனனே என்று சொல்ல முயல்கிறாhர்கள். இது முட்டாள்த் தனமானது. இராவணன் ஒரு பேராற்றல் மிக்க தலித் அரசன். அவன் ஒரு தீவிர சைவன்.

தீவிர சைவப் பற்றாளன். பார்ப்பனியத்திலிருந்து சைவத்தைப் பிரிக்கவும், தனித்துவமான தலித் சைவத்தை உருவாக்கவும், இராவணன் முயற்சித்தான். இலங்கையில் இராவணனின் ஆற்றல் மிக்க ஆட்சியைத் தோற்கடித்துப் பார்ப்பன ஆட்சியை உருவாக்க ஆரியர்கள் திட்டமிட்டார்கள். எனவே தென்னிந்தியாமீது படையெடுத்து தாக்குதல் நடத்த முனைந்தார்கள் இராமனுக்கு அந்த பொறுப்புக் கொடுக்கப் பட்டது.

தென்னிந்தியாவில் பார்ப்பனியத்தைப் பரப்புவதோடு பெண்களை அடிமையாக்குவதற்கும் இராமாயணக் கதை அடிப்படையாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் வாழ்ந்த தலித் சமூகத்தை பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பே இராமாயணமாகும்.

இராவணன் வீழ்ச்சியுற்றதோடு தெற்குப் பகுதிகள் முழுமையான பார்ப்பன ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டன. இராவணன் இறந்தபிறகு பல பார்ப்பன ரிஷிகள் வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்கள். சாதியற்ற சமூகமாக இருந்த தென்னிந்தியாவில் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சாதி அடிப்படையிலான சமூகமாக மாற்றி பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்தியலை புகுத்தி, தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தினார்கள். திராவிடப் பகுதியில் தாய்வழிச் சமூகம் நிலை பெற்றிருந்ததை மாற்றி ஆணாதிக்க தந்தைவழிச் சமூகமாக அதனை ஆரியர்கள் மாற்றினார்கள்.

சைவசமயத் தேவாரப் பதிகங்கள் இராவணனை உயர்த்திப் பாடுவதை நாமும் அறிவோம். ‘இராவணன் மேலது நீறு’ என்று தொடங்கி எத்தனையோ தேவாரங்கள் இராவணன் குறித்தும், இலங்கை அரசு குறித்தும் பாடப்பட்டுள்ளன. திருமுறைகளில் காணப்படும் சில வசனங்களை நேயர்களுக்கு இங்கு தருகின்றோம்.

‘வியரிலல்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்’

‘வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்’

‘கடற்படையுடைய அக்கடலிலங்கை மன்னன்’

‘இருசுடர் மீதோடா இலங்கையர் கோன்’

‘எண்ணின்றி முக்கோடி வாழ்நாளதுடையான்’

‘பகலவன் மீதியங்காமைக் காத்த பதியோன்’

‘சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்துடையான்’

இப்படியெல்லாம் பாடிப் புகழ்ந்தவர்கள் மேலும் சில விடயங்களை வலியுறுத்துகின்றார்கள். தமிழின் அவசியம் குறித்தும் தமிழின் மேன்மை குறித்தும் நாயன்மார்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

‘தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’
(ஆனால் இன்றோ இசைப்பாடல் என்றால் தெலுங்கில் இருப்பதே மரியாதை!)

‘திருநெறிய தமிழ்’ என்றும், ‘ஞானத்தமிழ்’ என்றும் ‘பேசும் தமிழ்’ என்றும், ‘உன்னைத் தமிழில் பாடுவதற்கென்றே என்னை நலம் செய்தாய்’
என்றும் பாடிவிட்டுப் போனார்கள்.
(ஆனால் இன்று கோவில்களில் தமிழ் எங்கே?)

இன்றைய தினம் இந்தியாவைப் பொறுத்த வரையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் படுகின்ற இன்னல்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரமாக உள்ளன. அதைவிடக் கொடூரம் என்னவென்றால் இவர்களது துன்பங்களும், துயரங்களும் வெளிஉலகிற்கு தெரியாதவாறு மறைக்கப்பட்டு வருவதுதான்.

இந்தியாவில் ‘கட்டாய மத மாற்றத் தடைச்சட்டம்’ ஒரிஸா மாநிலம் உட்பட இரண்டு மாநிலங்களில் சட்டரீதியாக அமுலாக்கப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கொண்டு வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அவரது கட்சி தோல்வியடைந்த பின்னர் இக்கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை செல்வி ஜெயலலிதா இரத்து செய்தார்.

தேர்தல் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை அவர் கருதியதனால்தான் மிகுந்த மனவருத்தத்துடன் இந்த சட்டத்தை செல்வி ஜெயலலிதா இரத்து செய்தார். பார்ப்பனியப் பெண்மணியும் இந்துத்துவ ஆதரவாளருமான செல்வி ஜெயலலிதா கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமுலாக்க விரும்பியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆயினும் இதற்குரிய அடிப்படைக் காரணங்களைச் சற்று தர்க்கிக்க விழைகின்றோம்.

இந்துத்துவ தீவிரவாதம் காரணமாக, அன்று அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டுப் பின்னர் அங்கே இராமர் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதற்காக வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்தும் இது ஒரு பாரிய பிரச்சனையாகவே இருந்து வருகின்றது. இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நாம் எமது நேயர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். நீண்ட நெடுங்காலத்திற்கு பின்னர் மீண்டும் ஒருமுறை இராமன் ஒரு போர்த் தலைவனாகச் சித்தரிக்கப் படுகின்றான்.

அழிக்கும் கடவுளான சிவனை இந்த இந்துத்துவ வாதிகள் முன்னிறுத்த வில்லை. மாறாக முன்னர் திராவிடர்களையும், சைவ மக்களையும் அழித்த இராமன் இப்போது முன்னிறுத்தப் படுகின்றான். மிக மோசமான மதவாதக் கோஷங்களும், வன்முறைகளும் முன் வைக்கப்பட்டன. இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்தும் சீர்குலைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு கிறிஸ்துவ மதம் மீதும் கடுமையான எதிர்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த மூன்று மதங்களையும் சார்ந்தவர்களிடையே உள்ள முறுகல் நிலை அதிகரித்து வருகின்றது. இதைவிட இன்னுமொரு விடயமும் பூதாகரமாக உருவெடுத்து வருகின்றது.

அதுதான் தலித் மக்களின் மதமாற்றம்!

இந்துத்துவத்தின் கொடுமையால் மிகக் கொடூரமான அடக்குமுறையைத் தொடர்ந்தும், அனுபவித்து வருகின்ற கோடிக்கணக்கான தலித் மக்களில் கணிசமானோர் மதம் மாறத் தொடங்கியிருப்பதனை நாம் காணக் கூடியதாக உள்ளது. இவர்கள் இப்படி மதம் மாறுவதற்குரிய காரணம் என்ன? மற்ற மதங்களில், அதன் கோட்பாடுகளில், வழிகாட்டுதலில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையா? அல்லது தாம் இறந்த பின்னர் சொர்க்கத்தை அடைவதற்கு இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ துணை செய்யும் என்பதா?

இல்லை! இல்லவே இல்லை!!

தாங்கள் வாழ்ந்து வருகின்ற இந்த தற்போதைய நரக வாழ்க்கையிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய வேட்கை! செத்த பின்பு சொர்க்கத்திற்கு போவது அல்ல! அவர்களால் சாதி மாற முடியவில்லை. அதனால் சமயம் மாறுகிறார்கள்.!!

இந்த மதமாற்றத்தைத் தடுக்கா விட்டால் இந்துத்துவம் ஆட்டம் காணத் தொடங்கி விடும். இதன் காரணமாகத்தான் இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டமும் இந்துத்துவ பேரினவாதக் கோஷங்களும்!

இந்தியாவில் வாழுகின்ற கோடிக்கணக்கான மக்களை வர்ணாசிரமத்தின் - சாதியின்- அடிப்படையின் கீழ் வைத்து ஒடுக்குகின்ற நிலைமை மாற வேண்டும். அதற்கு பிரிந்து கிடக்கின்ற சகல தலித் பிரிவுகளும், தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புக்களும் ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேரவேண்டும் என்பதே எமது அவா! சாதி என்பது பார்;ப்பனியம் கொண்டு வந்த ஒரு சதியாகும். சாதிப் பிரிவுக்கும், சாதி அடக்கு முறைக்கும் எதிராக மக்கள் சக்தி ஒன்றிணைய வேண்டும். இனவாதத்திற்கு எதிராக நடைபெற்ற உலக மகாநாடு ஒன்றில் பல தீர்மானங்கள் எடுக்கப் பட்டன. அவற்றுள் ஒன்று இந்தச் சாதி பாகுபாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சொல்வது என்பதாகும்!

‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்.

அன்புக்குரிய நேயர்களே!

இந்தியாவின் இந்துத்துவ வாதம் குறித்தும், சாதிவெறி குறித்தும் தர்க்கித்த நாம், தமிழீழம் கண்ட சாதிக் கொடுமைகளை ஈழத் தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கே இழைத்த அநாகரிகத் தீமைகளையும் மறந்து விடவில்லை! இன்னொரு இனத்தின் அடக்கு முறைக்குப் போராடுகின்ற மக்கள் தமது முன்னோர்கள், தம்மின மக்களுக்கே செய்திட்ட வரலாற்றுக் கொடுமைகளை மறக்கக் கூடாது!

இவை குறித்த விரிவான ஆய்வினை எதிர்வரும் காலத்தில் வழங்குவதற்கு விரும்புகின்றோம்.! இவை குறித்து இன்னும் ஆழமாக பரவலாக ஆய்வினைச் செய்வதே எமது எண்ணமுமாகும். இன்றைய தினம் நாம் கூறியவற்றை கருத்துக்கள் என்று சொல்வதைவிட நடந்த, நடக்கின்ற சம்பவங்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். வழமைபோல் சீர் தூக்கி பார்க்கின்ற பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகின்றோம்.!!

இன்றைய இந்தக்கட்டுரையை எழுதப் பல ஆய்வு நூல்கள் உதவின. முக்கியமாக ‘ஆட்சியல் இந்துத்துவம்’இ ‘இந்துத்துவம்-ஒரு பன்முக ஆய்வு’இ ‘நான் ஏன் இந்து அல்ல’இ ‘உலகமயம் எதிர்ப்பு-அரசியல் தலித்துக்கள்’, ‘Making India Hindu’, ‘Indian Middle Class’ ‘Why go for conversion’ போன்ற நூல்களுடன் சில விவரண ஒளிநாடாக்களும் உதவியுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

நன்றி :- சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா,www.tamilnation.org

தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இந்து கோயில்களைத் தரைமட்டமாக்குக!

நம் திராவிட மக்கள் புத்தி இல்லாதவர்களாக, மடையர்களாக, காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றனர். இன்னும் நாம், மதத்தின் பேரால், கடவுளின் பேரால் மட்ட சாதி ஆக்கப்பட்டு இழிநிலையில் இருப்பது பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இப்படி எதனால் காட்டுமிராண்டியோ, இழிமக்களோ ஆனோமோ அந்த மதத்தையும், கடவுளையும் பற்றிச் சிந்திப்பதே இல்லை. என்ன காரணம்? நம் மக்களுக்குப் புத்தியும் இல்லை மானம் இல்லை. இதன் காரணமாகவே ஏமாறுகின்றோம். பரம்பரை பரம்பரையாக நாம் ஏன் கீழ்ச்சாதி? பரம்பரை பரம்பரையாக அவன் ஏன் மேல்சாதி? என்று இந்த அதிசய அற்புதக் காலத்திலும் எவன் சிந்திக்கின்றான்? இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும் என்று எங்களைத் தவிர எந்தப் பொதுத் தொண்டுக்காரன் பாடுபட்டான்? எவன் சிந்தித்தான்?

பொதுத் தொண்டன் பொதுத்தொண்டு செய்கின்றேன் என்று கூறுகின்றானே, அவனும் சட்டப்படி சாத்திரப்படி இழிமகன்தானே! அவனும் பார்ப்பானுக்கு சூத்திரன் என்கிற வைப்பாட்டி மகன்தானே என்று நினைத்து, எவன் பொதுத்தொண்டு செய்கின்றான்? மக்களிடம் சென்று “நீங்கள் பக்திமான், மேலானவர், தர்ம புருஷன்'' என்று கூறினால் காசு கொடுப்பான். அதை விட்டுவிட்டு, “நீங்கள் மடையர்கள், கல்லைக் கும்பிடுகின்றீர்கள், சாணியைப் பிள்ளையார் என்கிறீர்கள்'' என்று கூறிக் கொண்டு “பசிக்குது கொஞ்சம் சோறு கொடுங்கள்'' என்றால் என்ன கூறுவான்? “உன்னுடைய லட்சணத்துக்குச் சோறு வேறா? போடா போடா'' என்றுதானே கூறுவான்?

இதுவரையில் இந்த நாட்டில் எவரும் செய்யாத தொண்டை நாங்கள்தான் செய்கின்றோம். இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஒன்று இருந்தால், இதுதான் என்று நினைத்தபோது வருகின்றோம். இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல, மடமையைத் திருத்த எந்தப் படித்தவன், புலவன் முன் வருகின்றான்? அவனவன் வயிற்றுப் பிழைப்புக்கே தாம் படித்ததைப் பயன்படுத்துகின்றான். மற்றபடி பணக்கார லட்சாதிபதிகள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாரும் இதுபற்றிப் பாடுபடுகின்றனரா? இப்படி மக்கள் மூடர்களாய் இருந்தால்தான் நாம் கொள்ளை அடிக்க வசதியாக இருக்கும் என்று கருதிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தட்டிப் பேச இங்கு ஆளே கிடையாது. மேல் நாட்டுக்காரன் அவற்றை எல்லாம் விரட்டி விட்டு அறிவுக்குப் பொருத்தமான முறையில் கடவுளையும் மதத்தையும் அமைத்துக் கொண்டான். அதன் காரணமாக, அறிவியலில் அதிசய அற்புதங்களை நாளுக்கு நாள் உண்டாக்கிய வண்ணம் இருக்கின்றான். அந்த நாட்டில் இப்படி எல்லாம் ஆக அங்குக் கடவுள் துறையில் மதத் துறையில் அறிவுத் துறையில், மாறுதல் உண்டாக்க அறிஞர்கள் கிளம்பிச் சீர்திருத்தினார்கள். நாம் இத்தனைக் கோயில் குட்டிச் சுவரினை வைத்துக் கொண்டு சாதித்தது என்ன? நம்மை சைனாக்காரனும் பாகிஸ்தானும் விரட்டுகின்றான். ஆண்டுக்கு 250 கோடி செலவில் பட்டாளத்தை வைத்துக்கொண்டு இருந்தாலும், நேரு (இந்தியாவின் தலைமை அமைச்சர்) நடுங்கிக் கொண்டு இருக்கின்றாரே?

தோழர்களே! ரயில் வந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பஸ் வந்து 50 வருஷம் ஆகின்றன. இன்னும் தந்தி, ரேடியோ போன்ற வசதிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கின்றன. இன்னும் இதைவிட அறிவியல் அதிசயம் நம் நாட்டிற்கும் வரப்போகின்றது. லண்டனில் நடக்கும் டான்சையோ சினிமாவையோ இங்கு இருந்து கொண்டே பார்த்துக் களிக்கும்படி "டெலிவிஷன்' வெகு சல்லிசாக வரப்போகின்றது. இந்த டெலிவிஷனால் லண்டனில் சினிமா, நாடகக்காரர்களுக்குப் பிழைப்புக் குறைந்து கொண்டே வருகின்றதாம். காரணம், பலர் டெலிவிஷன் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்கின்றனர்.

ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் போட்டிப் போட்டுக் கொண்டு, சந்திர மண்டலத்திலும் குடியேற முயற்சி செய்கின்றான். நமக்கு மட்டும் அப்படிப்பட்ட அறிவு இல்லை என்றால், நாம்தான் கல்லைக் கடவுளாகக் கும்பிடுகின்றோமே! மாட்டுச் சாணியையும் மூத்திரத்தையும் பஞ்சகவ்வியம் என்று கலக்கிக் குடிக்கின்றோமே! சாம்பலும் சுண்ணாம்புப் பட்டையும், செம்மண் பட்டையும் அடித்துக் கொள்ளுகின்றோமே! நாம் என்றைக்கு ஈடேறுவது?

முன்னோர்கள் சொன்னார்கள் மதம் சொல்லுகிறது ரிஷிகள், மகான்கள் சொல்லுகின்றனர் என்ற கருதாமல், தாராளமாக அறிவுக்கு ஆராய்ச்சிக்கு வேலை கொடுத்து உன் புத்தி சொல்லுகின்றபடி நட என்றுதான் கூறுகின்றோம். ஆனால், புத்தர் ஒருவர்தான் “உன் புத்திக்கு ஏற்றபடி, அது சொல்லுகின்றபடி நட. முன்னோர்கள் பெரியவர்கள் சாஸ்திரம் சொல்லுகிறது என்று கேட்காதே! உன் புத்தி சொல்லுகின்றபடி நட'' என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியினை ஒழித்துவிட்டார்கள். அந்தக் கொள்கை இன்று சீனா, ஜப்பான், சிலோன், திபெத் ஆகிய நாடுகளில் இருக்கின்றது. இன்று புத்தன் யார் என்று இங்கு பல பேர்களுக்குத் தெரியாது. இப்படிப் புத்தனுக்குப் பிறகு எவனுமே தோன்றவே இல்லையே! இந்த 2500 ஆண்டில் நாங்கள்தான் தோன்றி பாடுபட்டு வருகின்றோம்.


(10.10.1960 அன்று, தூத்துக்குடியில் ஆற்றிய சொற்பொழிவு)
நன்றி :-விடாதுகருப்பு

திங்கள், 14 மே, 2007


உலகத் தமிழர் கற்க வேண்டிய பாடங்கள்

"அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும், அதிகார அடிமைத்தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னும் முழு விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில், `கூலி' என்ற பெயர் மாறி, குடிமக்கள் என்ற நிலையைத் தமிழர் அடைந்துவிட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர். தமிழருடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு. தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணர் தமிழரே."

க.ப.அறவாணன்கன் தமிழர் தொல்பழம் பெருமைகள் பலவற்றைப் பெற்றவர். ஆனால் ஓர் இனத்தை, அந்த இனத்தின் பழம்பெருமை மட்டுமே எடுத்து நிறுத்திவிட முடியாது. 'தம் பழம்பெருமையை இழந்துவிடக் கூடாது. தம் குடிப்பெருமையை நாம் மேலெடுத்துச் செல்ல வேண்டும்' என்ற அளவில் மட்டுமே பழைய பெருமைகள் பயன்படும்; பயன்படுதல் வேண்டும்.

காகேசிய இனத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்க்கு இத்தகு வஞ்சினம் உண்டு.ஓர் நிகழ்வு : நிக்காலோ மானுச்சி (கி.பி. 1653 - 1708) என்பவர் ஓர் இத்தாலியர். ஔரங்கசீப் ஆண்ட காலத்தில் இந்தியாவிற்குத் தன் நண்பருடன் வந்தார். வழியிலேயே நண்பர் இறந்து போனார். ஒரு வழியாக அவரை அடக்கம் செய்த நிலையில், அரச தூதர் அங்கு வந்து சேர்ந்தார்.

அக்கால நடைமுறைப்படி அயல்நாட்டு வெள்ளைக்காரர் இறந்துவிட்டதால், இறந்தவருடைய உடைமைகளை எல்லாம் அரச தூதரும், அவருடன் வந்த காவலர்களும் முத்திரை இட்டு கைப்பற்றிக் கொண்டனர்.

அதனுடன் மானுச்சியின் உடைகளும், உடைமைகளும் கைப்பற்றப்பட்டன. இதனால் மானுச்சி மிகவும் பாதிக்கப்பட்டார்.

முடிவில், தம் பொருட்களைத் திருப்பித் தருமாறு விண்ணப்பித்தார். செயலாளரிடம் பெற்றுக் கொள்ளுமாறு மேலிடத்திலிருந்து மடல் வந்தது. ஆனால், அவற்றைச் செயலாளர் திருப்பித் தரவில்லை.

அவருடன் ஒத்துப்போக முடியாத நிலையில் மானுச்சி எழுதிய குறிப்பு வருமாறு; செயலாளர் என் பேச்சை நிறுத்தும்படி கத்தினார். "நீ அரசருடைய அடிமை என்பதை இன்னும் உணரவில்லை" என்று சீறினார்.

இந்தச் சொற்களைக் கேட்டதும் நான் எழுந்து நின்று கொண்டேன். "ஐரோப்பியர்கள் என்றும், எப்போதும், எவருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை, இருக்கவும் மாட்டார்கள்" என்று விடையளித்தேன்.

இத்தாலிய மானுச்சி தன் குறிப்பில் எழுதியதுபோல ஓர் அறைகூவலைத் தமிழராகிய நாம் சொல்ல முடியுமா? தமிழர், பிற இன மக்களிடம் அடிமைப்பட்டுத் தாழ்ந்து கிடந்ததை 1948 க்கு முற்பட்ட இந்திய, இலங்கை ஆகிய தாய் பூமிகளும், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ் முதலான குடியேற்ற நாடுகளும் மெய்ப்பிக்கின்றன.

உலக வரலாற்றில் அன்றுதொட்டு இன்றுவரை, தம் பழம்பெருமையை இழக்காமல் என்றும் வைத்திருக்கும் இனமாக கிரேக்க, உரோமானிய இனத்தையும், அந்த இனத்தின் வழி வந்த ஐரோப்பிய இனத்தையும், இடையீடுபட்டாலும், தன் தலைமை அடையாளத்தை இழக்காத சீன இனத்தையும் இடையூறுகள் இருந்தாலும், ஃபீனிக்ஸ் பறவைபோல எரிதழலில் எரிக்கப்பட்டும் எரிந்து போகாமல் நிமிர்ந்து நிற்கும் யூத இனத்தையும், நாம் சுட்டிக்காட்ட முடியும்.

இதுபோலத் தமிழினத்தைச் சுட்டிக்காட்ட முடியாது. அடிமை நிலை, கூலிநிலை, அகதிநிலை என்ற மூன்று நிலையிலிருந்தும் உலகத் தமிழர்கள் முற்றுமாக மீண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.

உலகத் தமிழர் 1947 - 48 க்குப் பிறகு, அரசியல் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது போலத் தோன்றினும், அது முழுமையான விடுதலை அன்று என்பதையே இலங்கை உள்ளிட்ட பகுதிகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும், அதிகார அடிமைத்தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னும் முழு விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில், `கூலி' என்ற பெயர் மாறி, குடிமக்கள் என்ற நிலையைத் தமிழர் அடைந்துவிட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர்.

தமிழருடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு. தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணர் தமிழரே.

தொலைநோக்கு இன்மையும், தமிழ் எனும் மொழியை மையப்படுத்தி சமூகக் கட்டொருமைப்பாட்டை வளர்க்காததும், தம் சமூகத்தைக் கண்டதுண்டமாக வெட்டிப்போடும் மதங்களையும், சாதிப் பிரிவுகளையும், கட்சிப் பிளவுகளையும் அனுமதித்து வளர்த்தெடுத்ததும், உட்பகையும், பொருளாதார நோக்கில் போதிய அளவு சிந்திக்காததும், பின் நாளில் வரும் அரசியல் ஆதிக்கங்களை ஊகித்துத் தற்காத்துக் கொள்ளாததும் குறிக்கத் தக்கனவாகும்.

சோதனைகள் வந்தபோதும், வரும்போதும் வெற்றி பெற்ற இனமக்கள் எவ்வாறு அவற்றை எதிர்கொண்டார்கள், வீழ்ந்தாலும் நிரந்தரமாக வீழாமல் எவ்வாறு நிமிர்ந்து நின்றார்கள் என்பதைக் கூர்ந்து பார்த்தாவது நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சில பாடங்கள் வருமாறு;

1. ஐரோப்பிய இன வரலாற்றைக் கற்கும் போது அவர்கள் தமக்குள் பேதம் கொண்டு, அடித்துக் கொண்டார்கள். ஒருவர்மேல் ஒருவர் படையெடுத்துக் கொண்டார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்திரேலியக் கண்ட மக்கள் தம்மேல் ஆதிக்கம் செய்வதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

மங்கோலிய இனத் தலைவன் செங்கிஸ்கான் (கி.பி. 1162 - 1227) மகன் ஒகடாய் 1241 இல் ஐரோப்பாவின் ஒரு பகுதியைக் (ரஷ்யா, போலந்து, ஹங்கேரி, ஜேர்மனி) கைப்பற்றினான் என்பது வரலாறு. ஆனால் அந்நிலை சிலகாலம் கூட நீடிக்கவில்லை. நீடிக்க விடவில்லை. அன்றுதொட்டு ஐரோப்பியரும் அவருக்கு மூலவரான கிரேக்கரும், உரோமரும் தம் நாடுகளைக் கடந்து தாம் வாழும் ஐரோப்பா கண்டத்தைக் கடந்தும், கடல் கடந்தும் வேறு நாடுகளை வெற்றி கண்டபொழுது, வென்ற நாடுகளை நம்மைப் போல அப்படியே விட்டுவிட்டு வந்துவிடவில்லை.

அவற்றைத் தம் பூமிகள் ஆக்கிக் கொண்டார்கள். தம் மொழி, பண்பாடு, நாகரிகம், ஆட்சி ஆகியவற்றை அங்கே நிலைகொள்ளச் செய்தார்கள். அலெக்சாண்டர் (கி.மு. 356 - 323) எகிப்தின் மேல் படையெடுத்ததின் நினைவாக எகிப்தில் அலெக்சாண்டிரியா என்ற நகரம் உருவாக்கப் பெற்றது. டாலமி எனும் கலப்பினமே அந்நாட்டை நெடுங்காலம் ஆண்டது. புகழ்பெற்ற எகிப்திய அரசி, கிளியோபாட்றா, டாலமி இனத்தில் பிறந்தவள். உலகம் முழுவதும், கிரேக்கக் கலையும், கிரேக்க இரத்தமும், உரோமானியர்களின் இரத்தமும் கலந்தன.

தமிழ்நாட்டுச் சங்ககால அரசிகளின் அந்தப்புரங்களில் கிரேக்க மகளிர் வேலை பார்த்ததும், தமிழ் அரசர்க்கு மதுவை ஊற்றிக் கொடுத்ததும் இலக்கியப் பதிவுகள். தமிழகம் முழுவதும் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள உரோமானியக் காசுகளும், மதுச் சாடிகளும் தமிழர் பெருமையை அறிவிப்பன அல்ல. உரோமானியக் காசுகளுக்கும், மதுவுக்கும் கி.மு. விலேயே தமிழர் அடிமையானமைக்கு அவை சான்றுகள்.

2. கவனிக்க வேண்டிய இன்னோர் இனம் சீன இனம். இன வரலாற்றின்படி சீனர் மங்கோலிய இனத்தைச் சார்ந்த மஞ்சள் நிற மக்கள். கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் அனைத்துக் கண்டங்களிலும் பரவிய ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்துச் சாதித்துக் காட்டியவர்கள் ஆபிரிக்காவிலும் இல்லை. தென் - வட அமெரிக்காவிலும் இல்லை, அவுஸ்திரேலியாவிலும் இல்லை, ஆசியாவில் உள்ள பிற இன மக்களிலும் இல்லை, ஜப்பானும், தாய்லாந்தும் முற்றுமாக ஐரோப்பிய ஆதிக்கம் உள்ளே நுழைய விடாமல் கடைசிவரை தடுத்துக் கொண்டன.

பெரும்பகுதி சீனர்களும் அதில் வெற்றி கொண்டனர். சீனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது. அவர்தம் தலைமை உணர்வு உலக இன மக்களிலேயே சீன இனம்தான் உயர்ந்தது என்று ஒவ்வொரு சீனக் குழந்தைக்கும் கற்பிக்கப் பெறுகிறது. சீனர்களில் ஏழைகள் இருப்பதில்லை. அவர்கள் பல நாடுகளுக்குக் குடியேறிய போதும் எந்த இடத்திலும் அவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை. இருப்பதில்லை. வணிகத்திலும், செல்வம் சேர்ப்பதிலும் மிகக் குறியாக இருப்பார்கள். இருக்கும் இடத்தில் மட்டுமல்லாமல் குடியேறிய நாடுகளில் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை முதலானவற்றில் பிடிவாதமாக இருப்பார்கள்.

இந்த நிலைமையை அவர்கள் அடைந்ததற்குக் காரணம், தங்கள் இனத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்த கன்ஃபூசியஸ் (கி.மு. 551 - 479) போதனைகளையும், இலாவோஸ் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) போதனைகளையும் கடந்த முப்பது நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருவதுதான். சீனாவிலும், அயல் நாடுகளிலும் வாழும் சீனர்கள், தாம் வாழும் இடங்களில் வணிகத்தையும், பொருளாதாரத்தையும் தம் கைவசம் வைத்திருப்பதைக் காணுகிறோம். பொருளாதார முதன்மை சீனர்களுக்குக் குடியேறிய நாடுகளிலும் தலைமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

3. உலக ஆதிகுடிமக்களாக யூதர்கள் தம்மைக் கருதுகின்றனர். பைபிள் பழைய ஏற்பாட்டைத் தங்கள் புனித நூலாகப் போற்றுகின்றனர். அதனை ஒட்டி, மோசஸ் அமைத்துக் கொடுத்த யூத சமயத்தைத் தங்கள் உயிரினும் மேலானதாகப் பின்பற்றுகின்றனர்.

உலக இன மக்களில் சொல்லில் வடித்தெடுக்க முடியாத துன்பங்களை யூத மக்கள் சந்தித்துள்ளனர். முதல், இரண்டாம் உலகப் போர்களின் போது இலட்சக்கணக்கில் யூதர்கள் துடிதுடிக்க கொல்லப்பட்டனர். ஜேர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் மட்டும், அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான். இப்படி சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த யூதர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று பழக்கங்கள் உள்ளன. அவையாவன: ஒன்று, எந்தச் சூழ்நிலையிலும் கல்வி கற்பது.

இரண்டு, தம் யூத இன மக்களில் ஒருவர் சிறிய ஒன்றைச் சாதித்தாலும் அவரை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவது. மூன்று சீனர்களைப் போன்றே, சீனர்களைவிடவும் பொருளாதாரத்தில் யூதர்கள் மிகக் குறியாக இருப்பார்கள்.

அன்று மட்டுமன்றி இன்றும் உலகப் பெரும் பணக்காரர்களாக யூதர்களே விளங்குகின்றனர். ஐரோப்பிய, சீன, யூத, வரலாற்றை உற்றுப் பார்க்கும் போது அவர்தம் பெரும் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம், அவர்கள் பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதே என்பதை அறிந்து கொள்ளலாம்.

தமிழர்கள், தம் பொழுதுபோக்கு, கலை, இலக்கிய நாட்டங்களிலிருந்து பொருளாதார நாட்டத்தை நோக்கி ஒருமித்து முயல வேண்டும். உலகத் தமிழர் தம் நிகழ்கால, வருங்கால வெற்றியை அவர்களுடைய பொருளாதார வெற்றியே நிர்ணயிக்கும்.


தினமணி- 28 August 2006

வெள்ளி, 11 மே, 2007

தமிழன் என்றோர் இனம்

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்றுள்ள வங்கதேச வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் விற்பனை கொல்கத்தாவில் இப்பொழுது அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மேற்கு வங்க இளைஞர் கூறும் காரணம், நம் முரட்டுத்தோலை ஊருடுவிக் குத்திக்கொண்டு நிற்கிறது. "இந்தியா சூப்பர் எட்டுக்குள் நுழைய முடியாத நேரத்தில், நம் பக்கத்து நாடான வங்கதேசம் நுழைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே! வங்காளத்தில் கிழக்கு, மேற்கு என்று நாம் ஏன் பார்க்க வேண்டும்?"

தமிழ்நாடு, கேரளா, குஜராத் என்ற எந்தவொரு மாநிலத்திலும் காண முடியாத காட்சியை மேற்கு வங்கத்தில் காண முடிகிறதென்றால், அங்கே `வங்காளி' என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. அது இயற்கையானதுதான்.

இடி அமீனின் கொடுங்கோலாட்சியின் கோரத் தாக்குதலிலிருந்து தன் மாநில மக்களைக் காப்பாற்றி அழைத்து வர விமானங்களை அனுப்பியது குஜராத் அரசு.

வளைகுடாப் போரின்போது மலையாளிகளைப் பாதுகாப்பாக ஏற்றிவர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தது கேரள அரசு.

மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட மக்கள் தங்கள் சொந்தபந்தங்களைக் காக்க மத்திய அரசுக்கு மனு அனுப்பிவிட்டு கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கவில்லை. இறையாண்மையுள்ள ஒரு நாடு செய்ய வேண்டிய வேலையை குஜராத், கேளர மாநில அரசுகள் செய்தன.

ஆண்டாண்டு காலமாய் சிங்களப் பேரினவாத அரசின் கீழ் இரண்டாந்தரக் குடிமக்களாய் `தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் பாழ்பட்டு' நின்ற தமிழர்கள், அறவழிப் போராட்டங்கள் அலுத்துப்போன நிலையில், ஆயுதமேந்திய போராட்டமே தங்கள் விடிவுக்கான வழி என ஈழத்தமிழ் இளைஞர்கள் துணிவான முடிவு மேற்கொண்டது வரலாற்றுக் கட்டாயமாகும்.

விடுதலைப் போராளிகளை ஒடுக்க முயலும் எந்த அரசும் அவர்களுக்குச் சூட்டும் முதற்பெயர் `பயங்கரவாதிகள்' என்பதாகும். இலங்கை அரசும் அதைத்தான் செய்தது.

அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு கௌரவம் பார்க்கும். "ஆயுதங்களை ஒப்படைத்த பின்புதான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்." என நிபந்தனை விதிக்கும். ஏராளமான தடைகளை எதிர்கொண்டு மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஆயுதங்களை உற்பத்தி செய்வது, பிற நாடுகளிடமிருந்து வாங்குவது ஆகியவற்றை மேற்கொண்ட பின் வஞ்சக அரசிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்பது தற்கொலைக்குச் சமம் என்பதை உணர்ந்த போராளிகள், அரசின் நிபந்தனைக்கு இணங்க மறுப்பது இயல்பாகும்.

உலகின் எந்த மூலையில் விடுதலைப் போராட்டம் நடந்தாலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு தரும் இந்திய அரசின் கண்களில், ஈழ விடுதலைப் போராட்டம் மட்டும் பயங்கரவாதமாகத் தோன்றக் காரணம் என்ன?

யாசர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை முன்னணி இயக்கத்துக்கு நிதியுதவி, டில்லியில் தூதரகம் திறக்க அனுமதி, ஐ.நா. சபையில் அங்கீகாரம் ஆகியவற்றைச் செயல்படுத்திய இந்திய அரசுக்கு, ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதில் மட்டும் ஏன் தனி அக்கறை?

ராஜீவ் படுகொலை என்ற விஷயத்தை ஒரு காரணமாகக் கொண்டு இந்தியத் தமிழர்கள் தங்களுடைய நியாயம், நேர்மை, கடமை, இன உணர்வு ஆகியவற்றிலிருந்து நழுவுவதிலேயே குறியாக உள்ளனர். தேர்தல், சட்டமன்ற பாராளுமன்ற இடங்கள், ஆட்சி, பதவி, சொத்துச் சேர்த்தல், சுகமான வாழ்க்கை, எவருடனும் எதற்காகவும் கூட்டணி வைத்துக்கொள்வதை நியாயப்படுத்துதல் என்பன இவர்களுடைய வாழ்க்கை முறைகளாக மாறிவிட்டன. தங்களைப் போன்று ஈழத் தமிழர்களும் சிங்கள அரசின் கொத்தடிமைகளாக வாழ்ந்து. மானம் பறி போனாலும் வசதியாக வாழ முயற்சிக்க வேண்டுமெனக் கூறாமல் கூறுகின்றனர்.

உலகின் பல பகுதிகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள், ஈழ விடுதலைப் போருக்கான பல்வேறு பங்களிப்புகளை மிகவும் எச்சரிக்கையாகவும் ஆர்வத்துடனும், செய்து வருகின்றனர். எத்தனையோ மோசமான வாழ்நிலைக்கு நடுவிலும் அவர்கள் சமகாலத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் செய்துவரும் அளப்பரிய தொண்டு வியப்புக்குரியது.

தமிழக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே நம் மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக் கொல்கிறது.

மத்திய அரசைச் சங்கடப்படுத்திவிடக்கூடாது எனக் கருதும் மாநில அரசும், இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ளக்கூடாது எனக் கருதும் மத்திய அரசும் தமிழனுக்கு வாய்த்த சாபக்கேடுகள் என்றே தோன்றுகிறது.

கொழும்பில் உள்ள கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்திய போராளிகளின் வலிமை கண்டு சிங்கள அரசு அரண்டுபோய் நிற்கிறது. உலகிலேயே முதன் முறையாகப் போராளிக் குழு ஒன்று தனக்கென்று விமானப்படையை வைத்திருப்பது இதுவே முதல்முறை.

`கங்கை கொண்டான்', `கடாரம் வென்றான்', `இமயத்தில் கொடி நாட்டினான்', `கனக விசயரைக் கல் சுமக்க வைத்தான்' என்றெல்லாம் வாய் வலிக்காமல் பழம்பெருமை பேசிவரும் இந்தியத் தமிழர்கள், நின்று நிதானித்துச் சிந்திக்க வேண்டும் `வங்கக் கடல் சோழர்களின் ஏரியாக இருந்தது' எனத் தம்பட்டம் அடிப்பவர்கள் நிகழ்காலத்துக்கு வர வேண்டும்.

வரலாற்றிலேயே முதன்முறையாகத் தமிழன் விமானப்படை வைத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியைக்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாமல், ஓரக்கண்ணால் டில்லியைப் பார்க்க வெட்கமாக இல்லையா?

வட மாநிலங்களில் சில போராளிக் குழுக்களுடன் மத்திய அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருப்பதையும், வேற்று நாட்டில் வைத்து அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் இந்தியத் தமிழர்கள் பலர் அறியாமல் இருக்கலாம்.

மிரண்டு போய் நிற்கும் சிங்கள அரசு, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் ஈழப் போராளிகளை அடக்கி ஒடுக்க இந்திய அரசினுடைய முப்படைகளின் உதவியை நாட முனைந்துள்ளது.

இந்திய மீனவர்களின் மீது பாயும் ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டும் இந்திய இறையாண்மையை ஓட்டையாக்கி வருவதை மத்திய அரசு உணரவில்லை. எவனோ சாகிறான் என்ற பொறுப்பற்ற தன்மையே தொடர்கிறது.

நாடுகளின் எல்லைகள் விரிவதும் சுருங்குவதும் சில நாடுகள் காணாமல் போவதும் புதிய நாடுகள் உருவாவதும் வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து வருவனவாகும். ஆண்டான் - அடிமை உறவைப் பேணி இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டிய கட்டாயம் ஈழத் தமிழர்களுக்குக் கிடையாது.

இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றைக் காக்க வீரப்போர் புரிந்துவரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் ஏதும் செய்ய இயலாவிடினும், சிங்கள அரசுக்குத் துணைபோக இந்திய அரசை அனுமதியாதிருக்கும் செயலையாவது நாம் செய்தே தீர வேண்டும்.

இனத்தாலும் மொழியாலும் குருதி உறவுள்ள சொந்தம் அழிவதைப் பார்த்துக் கொண்டே இருந்த கல் நெஞ்சம் கொண்டோர் என்று இந்தியத் தமிழர்களுக்கு ஏற்படும் கறை எதிர்காலத்தில் கண்ணீராலும் செந்நீராலும் போக்க முடியாத அளவுக்கு அழுத்தமாகப் பதிந்துவிடும்.

புறநானூற்றுப் புகழ் என்று பெருமையாகப் பேசப்படுவது வீர மரணம் எய்தும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும்.
நன்றி:- ஜனசக்தி (தமிழகம்) - ஏப்ரல் 11, 2007

என் மரணத்தில்...

எழுதுவதற்கு இதை
இன்னும் காலங்கள்
இருக்கலாம்
பழுதுற்றுப்
பயனின்றிப்
பிணமாய் நான் விழ
இன்னும் வருடங்கள் ஆகலாம்
அவசியமாய் இது
நடப்பதற்கே
அவசரமாய் இதை
எழுதுகின்றேன்
அலட்சியமாய் விடாமல்
என் இலட்சியமாய் ஏற்று
முடிப்பீர்
ஒவ்வொரு தமிழனின்
இறப்பிலும்
தன் பிறப்பும் சிறப்பும்
அறியா
தமிழினத்து மனிதர் சிலர்
தமிழனாய்ப்
பிறத்தல் வேண்டும்
இறந்து நான்
இருக்கையில்
மறந்தும்
யாரும் அழுது
என் மரணத்தினை
இழிவு செய்யாதிருங்கள்
ஒரு நாள் என்னைச்
சென்னையில் வையுங்கள்
மறு நாள் என்னைக்
காரைக்காலில் புதையுங்கள்
வலத்திய இடத்தில்
ஒலிப்பெருக்கிகள் வையுங்கள்
தமிழிசைப் பாடல்கள்
ஒலிமுழக்கம் செய்யுங்கள்
தமிழாய் வாழும்
தமிழறிஞர்கள்
ஊரும் உறவும்
என் உடல் சூழும் வேளை
தமிழ்ச் செழுமை
தமிழனப் பெருமை
வந்தவர் அறிய
உரையாற்றி உரையாற்றி
நில்லுங்கள்
உணர்வுற்று சில தமிழன்
பிறப்புற்றான் என்றால்
என் பிணம் கூட
உளம் மகிழும்
புதையுங்கள்
ஊர்வலமாய்
என்னுடல் போகும் போது
தமிழ் உணர்வுப் பாடல்கள்
உடன்வரச் செய்யுங்கள்.
வழியில் ஒரு நொடி
அரசலாற்றின்
அந்த நீர்
ஒலி
கேட்க நிறுத்துங்கள்
உயிர்க்காற்றுப் போன
என் உடலில்
அரசலாற்றுக்
காற்று
சில நொடி
படச் செய்யுங்கள்
புதைக்கும்போது
என் இசைப்பாடல்
ஒன்று ஒலிக்கப் புதையுங்கள்
ஈழம் பிறக்கும்
நாள் முன்
நான் இறக்கும்
நாள் வந்தால்
ஈழம் பிறக்கும் நாள்
"ஈழம் பிறந்தது" என்று
என் கல்லறையில்
எழுதுங்கள்
இந்த எழுத்துக்கள்
படர்ந்த பின்தான்
மண்ணுள்
என் உடல்
செரிக்கும்
-பாவலர். காரை மைந்தன
நன்றி: தென்செய்தி, Sept 16, 2006
வீழ்வது நாமாயினும்
வாழ்வது தமிழாகட்டும்.....
வீழ்ந்தும் தமிழுக்கு
விதையாவோம்...
நன்றி- தமிழ் மன்றம்.

வியாழன், 10 மே, 2007

பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை

-கவிஞர் காசி ஆனந்தன்

இந்துக்களே விழிமின் எழுமின்!















நன்றி:விடாது கருப்பு

தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
- பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்


( நன்றி: புரட்சிப் பாவலரின் "சிரிக்கும் சிந்தனைகள்" நூலிலிருந்து)

1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.

1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.

1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.

1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.

1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.

1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.

1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.

1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.

1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.

1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.

1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.

1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.

1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.

1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.

1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.

1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..

1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.

1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.

1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.

1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.

(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)

1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)

1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.

1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.

1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".

1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.

1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.

1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.

1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.

1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.

1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.

1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.

1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.

1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.

1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.

1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.

1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.

அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.

1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.

1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.

1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.

1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.

1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.

1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.

1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.

1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.

1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.

1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.

"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.

1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.

1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.

1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.

1970, சனவரி - இரமணி மறைவு.

1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.

1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.